உலகப் பொதுமறை திருக்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் முஸ்லிம் முஹம்மது மர்மடியூக் பிக்தால். 1875இல் கிறித்தவ பாதிரியாருக்கு மகனாகப் பிறந்து கிறித்தவ மத நம்பிக்கை சார்ந்து வளர்ந்த மர்மடியூக் வில்லியம் பிக்தால் வாலிப வயதில் நிகழ்ந்த சில சம்பவங் களால் இஸ்லாமிய மார்க்கத்தின் மீதான ஈர்ப்பால் 1917ஆம் ஆண்டு இஸ்லாத்தைத் தழுவினார்.
Bombay Chronicle எனும் பத்திரிகை ஆசிரியராகப் பொறுப் பேற்க இந்தியா வந்து 1924 வரை இங்கு பணியாற்றினார். தொடர்ந்து ஹைதராபாத் நிஜாம் ஆட்சியில் முஹம்மது பிக்தால் ஆசிரியராக இருந்து வெளியிட்ட Islamic Culture எனும் காலாண்டிதழ் உலகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழக நூலகங்களுக்கும் சென்று சேர்ந்தது. இதன் மூலம் பல்லாயிரம் பேர் இஸ்லாத்தைக் குறித்து தெரிந்து கொள்ள பிக்தால் காரணமாக இருந்தார்.
1927ஆம் ஆண்டு சென்னையில் பிக்தால் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு The Cultural Side of Islam எனும் புத்தகமாக வெளியாகி இஸ்லாமிய நாகரிகத்தின் எழுச்சி, வீழ்ச்சியை ஒருசேர எடுத்துரைத்திருந்தது. இஸ்லாமியக் கலைப்பண்புகள் என்ற பெயரில் தமிழிலும் இந்நூல் வெளிவந்துள்ளது. ஹைதராபாத் நிஜாம் அரசில் பணியிலிருந்து கொண்டே திருக்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் மகத்தான பணியை 1928இல் மேற்கொண்ட பிக்தால் 1930இல் பூர்த்தி செய்தார்.
தனது ஆங்கில மொழிபெயர்ப்பைச் சரி பார்க்கவும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் எகிப்து சென்ற பிக்தால் அங்குள்ள மூத்த அறிஞர்கள், அல் அஸ்ஹர் பல்கலைக்கழக கல்வியாளர்களின் ஆலோசனை பெற்று லண்டன் திரும்பி The Glorious Quran எனும் பெயரில் வெளியிட்டார். பின்னர் ஹைதரõபாத் நிஜாம் நிதியுதவியுடன் அரபி, ஆங்கிலம் இணைந்த பதிப்புகள் வெளியாகின.
பிற்காலத்தில் பல்வேறு அறிஞர்கள் திருக்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டாலும் முஹம்மது பிக்தாலின் மொழிபெயர்ப்பே முதன்மையானதாக இன்றளவும் காணப்படுகிறது.